திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாதாசாகெப் பால்கே இந்திய திரைப்படத் துறையில் முதன்முதலில் 108 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தை தயாரித்தார். அவர் பெயரில் சிறந்த திரைப்பட சாதனையாளர்களுக்கு சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன்லால், சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, விஸ்வஜித் சாட்டர்ஜி, சுபாஷ் கைய் ஆகிய ஐந்து பேர் கொண்ட ஜூரி உறுப்பினர்கள் ரஜினிகாந்தை தேர்வு செய்திருப்பதாகவும், ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, ரஜினிகாந்த் திரையுலகில் சிறந்த சேவையை செய்து உள்ளார். இது அவருடைய திரைப்பட சாதனைக்கு, சேவைக்கு கொடுக்கப்பட்ட விருது. தமிழக தேர்தலுக்கும் ரஜினியின் விருதுக்கும் தொடர்பில்லை. இதை ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்று ஜவடேகர் தெரிவித்தார்.
இந்த விருது முன்பு தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குநரும், தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் ஆடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.