/

'இந்த மூன்று செயல்பாடுகளும் கரோனாவைக் கட்டுப்படுத்தும்' - பினராயி விஜயன்

கேரளத்தில் ஏப்ரல் 16, 17 ஆகிய இரு நாள்களில் 2.5 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

News image
கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
Updated On :15 ஏப்ரல் 2021, 12:03 pm

DIN

கேரளத்தில் ஏப்ரல் 16, 17 ஆகிய இரு நாள்களில் 2.5 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கரோனா ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த மூன்று முடிவுகளை தீவிரமாக செயல்படுத்துவதன் மூலமாக கரோனா பாதிப்பைக் குறைக்க முடியும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

மேலும், 'அனைத்து மாவட்டங்களிலும் கரோனா சோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட அதிகாரிகள் அவரவர் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்ற அனைவருக்கும் சோதனை செய்யப்படும். வேகமாகப் பரவும் பகுதிகளில் வசிப்பவர்கள், பொதுப் போக்குவரத்துத் துறை,  சுற்றுலாத் துறை, கடைகள், ஹோட்டல்கள், சந்தைகள் மற்றும் சேவை மையங்களில் பணிபுரிபவர்களுக்கு கரோனா பரிசோதனையில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஏப்ரல் 16, 17 ஆகிய இரு தினங்களில் மட்டும் மொத்தமாக 2.5 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்' என்று கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.