புது தில்லி: கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் நாட்டில் கரோனா முதல் அலை தீவிரமடைந்து, பிறகு, குறைந்து, மீண்டும் இந்த ஆண்டு கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, மெல்ல குறைந்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் மிகக் குறைவான கரோனா பாதிப்பை நாடு சந்தித்துள்ளது.
அதாவது, 2020ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு, கடந்த நவம்பர் மாதம் தான் மிகக் குறைவான புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தில் 3.1 லட்சம் புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான்.. உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
நாட்டில் கடந்த மே மாதம் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டிருந்தது. மே 6ஆம் தேதி ஒரே நாளில் 4,14,118 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது மிக அதிகபட்ச பாதிப்பாகும். ஆனால், மெல்ல கரோனா பாதிப்பு குறைந்து, சுமார் 547 நாள்களுக்குப் பிறகு தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
நாட்டில் முதல் கரோனா பாதிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி கேரளத்தில் பதிவானது. அதன்பிறகு கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட், 7ல் 20 லட்சமாகவும், ஆகஸ்ட் 23ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பர் 5ல் 40 லட்சமாகவும், செப்டம்பர் 16ல் 50 லட்சமாகவும் உயர்ந்தது.
தொடர்ந்து உயர்ந்து 2020ல் டிசம்பர் 19ஆம் தேதி ஒரு கோடியாக அதிகரித்தது. அங்கேயே நின்றுவிட்டதா என்ன? இல்லையே, தொடர்ந்து அதிகரித்து வெறும் 5 மாதங்களுக்கும் குறைவான நாள்களிலேயே 2021ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 கோடியாகவும், ஜூன் 23ல் 3 கோடியாகவும் அதிகரித்தது.