கேரளத்தில் கூட்டணி கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகியவற்றிற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேசிய மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட உடன் அவை தேசிய தலைமை மூலம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகள் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.