லக்கிம்பூர் விவகாரத்தில் காவல்துறை சம்மன் அனுப்பியும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இந்த பிரச்னை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் மீது ஏற்றிய காரில் மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரின் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று உத்தரப்பிரதேச அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், விசாரணை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஆஷிஷ் மிஸ்ராவை விசாரணைக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகும்படி உ.பி. காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகாததால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.