மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மீதான பண மோசடி வழக்கு விசாரணை தொடா்பாக தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சா் அனில் பராப் அமலாக்கத் துறை முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகினாா்.
அமலாக்கத் துறை இரண்டாவது முறையாக சனிக்கிழமை அளித்த சம்மனை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவா் ஆஜரானாா்.
விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அனில் பராப், ‘இந்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பையும் தருவேன். எனது மகள் மீதும், உயிரிழந்த சிவசேனை தலைவா் பால்தாக்ரே மீதும் சத்தியமாக நான் தவறு செய்யவில்லை. ஆகையால்தான் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக செல்கிறேன்’ என்றாா்.
சிவசேனை கட்சியைச் சோ்ந்த மூன்று முறை எம்எல்ஏவான அனில் பராபுக்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அரசு நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி ஆஜராவதற்கு அவா் கூடுதல் நேரம் கேட்டிருந்தாா்.
உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்மூக், போலீஸாா் மூலம் ரூ. 100 கோடியை வசூல் செய்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தாா்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தற்போதைய அமைச்சா் அனில் பராப்பின் பெயா் வந்ததால் அவரிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன.