மேகாலயத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேகலாலய மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து தலைநகர் ஷில்லாங் பகுதிக்குச் சென்ற பேருந்து மேம்பாலத்தில் செல்லும்போது நிலை தடுமாறி ரிங்டி(Ringdi) ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நோங்சரம் என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரோங்ஜெங் மற்றும் வில்லியம் நகர் பகுதி தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் ரோங்சங் மருத்துவமனை மற்றும் வில்லியம்நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரா பகுதியைச் சேர்ந்த 9 பேரும் வில்லியம் நகர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் இதில் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
முதல்வர் கான்ரட் கே சங்மா விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'எதிர்பாரா இந்த விபத்து வலியை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.