உச்ச நீதிமன்ற கொலிஜியம் சில நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹாவின் பணி உபசார விழாவில் பேசிய ரமணா, "நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை மிகவும் மதிப்புமிக்கது கண்ணியமிக்கது. ஊடக நண்பர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். திறமை வாய்ந்த நீதிபதிகளின் எதிர்காலம் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டதால் சிதைந்துள்ளது.
இது துரதிருஷ்டவசமானது. இதனால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். பெரும்பான்மையான மூத்த பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்கள் முதிர்ச்சியுடன் இதில் பொறுப்புடன் நடந்து கொண்டதை பாராட்டுகிறேன்" என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக செய்தி வெளியாகின.