இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் விண்வெளி, ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு உச்சிமாநாடு நடக்காத நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் பங்கேற்கும் இரு நாடுகளிடையேயான உச்சி மாநாடு தில்லியில் இன்று நடைபெறுகிறது.
இதில் இரு நாடுகளின் நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் ஆலோசிக்கப்படுகிறது. இதனையடுத்து விண்வெளி, ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், இலக்கியம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்:
இந்திய ராணுவத்திற்கு 7 லட்சம் துப்பாகிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக ரஷியாவிலிருந்து ஏகே ரகத் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
ரஷிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.
நவீன ரக ரஷிய போர் விமானங்களை வாங்குவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
ரஷியாவிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்வது, தொழில்நுட்பம், வணிகம் போன்றவற்றில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.