கேரள மாநிலத்தில் பாலின பாகுபாட்டைக் களையும் வகையில் மாணவ மாணவிகளுக்கு ஒரே மாதிரியான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் செயல்பட்டு வருகிறது பலுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி.
இந்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான சீருடை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. மாணவ, மாணவிகளுக்கிடையேயான பாலின பேதத்தைக் களையும் வகையில் ஒரே மாதிரியான சீருடையை பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பை ஏற்று மாணவ, மாணவிகள் ஒரே மாதிரியான சீருடையை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல்
இதற்கு மாநில அரசு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எதிர்ப்பவர்கள் கேரளம் மற்றும் அதன் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.