மக்கள் தங்களது பெருவாரியான வாக்குகள் மூலம் குஜராத்தை பாஜகவின் நிரந்தர இடமாக மாற்றுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அகமதாபாத்தின் நாரன்புரா பகுதியிலுள்ள துணை மண்டல அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் அமித் ஷா வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. குஜராத்தின் மக்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் குஜராத்தை பாஜகவின் நிரந்தர இடமாக மாற்றுவார்கள் என்று கூறினார்.
குஜராத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக இன்றும் (பிப்.21) இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 28-ம் தேதியும் நடத்தப்படுகிறது. இதில் 575 இடங்களுக்கு 2,276 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.