காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் வழக்கமாக தேசியக்கொடி ஏற்றும் இடத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர்.
இதேபோல ஐடிஒ சந்திப்பில் உள்ள தில்லி காவல்துறை தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
தில்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, முக்கிய பகுதிகளில் நுழையக்கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், தடுப்புகளை மீறி விவசாயிகள் தற்போது தில்லி செங்கோட்டை பகுதியை அடைந்துள்ளனர்.
முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
தில்லி - சிங்கு எல்லை, ஹரியாணா- திக்ரி எல்லை, உத்தரப்பிரதேசம் - காசியாபாத், ராஜஸ்தான் - ஷாஜஹான்பூர், பஞ்சாப் - லூதியானா ஆகிய 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் நடந்தும், டிராக்டர்களிலும் மத்திய தில்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.