கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஜிஎஸ்டி அதிகாரியைத் தாக்கிய மதுபானக்கூட உரிமையாளர், ஊழியர்கள் உள்பட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜிஎஸ்டி அதிகாரியாக வந்தவர் போலி என நினைத்து, ஏமாற்றி பணம் பறிக்க வந்ததாக எண்ணி ஊழியர்களுடன் சேர்ந்து தாக்கியதாக விடுதி உரிமையாளர் காவல் துறை விசாரணையில் விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள கொரமங்கலா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மதுபானக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு வந்த ஜிஎஸ்டி அதிகாரியை போலி என நினைத்து மதுபானக்கூட உரிமையாளர், தனது ஊழியர்களுடன் சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளார்.
பூட்டிய அறையினுள் வைத்து சுமார் மூன்று மணிநேரத்திற்கு ஜிஎஸ்டி அதிகாரியை அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மேற்கொண்ட விசாரணையில் ஜிஎஸ்டி அதிகாரியாக வந்தவர் வினய் நடால் என்றும், அவர் உண்மையாகவே ஜிஎஸ்டி அதிகாரி எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மதுபானக்கூட உரிமையாளர், ஊழியர்கள் உள்பட 3 பேர் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய வினய் நடால், ''மனுபானக்கூடத்திற்கு அனுமதி கட்டணத்தை செலுத்திவிட்டு காலை 10.30 மணியளவில் சென்றேன். அங்கு முகம் தெரியாத நபர் என்னைக் குறித்து விசாரித்தார். நான் ஜிஎஸ்டி அதிகாரி என்று பதிலளித்தேன். பிறகு 12.30 மணியளவில் மதுபானக்கூட உரிமையாளர் என்னிடம் வந்து என்னைப் பற்றி விசாரித்து, அடையாள அட்டையைக் காட்டுமாறு வற்புறுத்தினார். நான் மறுப்பு தெரிவித்தேன். இதனையடுத்து மதுபானக்கூட ஊழியர்களை அழைத்து என்னை தனியறையில் பூட்டி தாக்க ஆரம்பித்தார். ஊழியர்களுடன் தொடர்ந்து தாக்கிய அவர் 4.30 மணியளவில் தான் என்னை விடுவித்தார் என்று கூறினார்.