புதுப்பிக்கப்பட்ட சர்வதேச பயண வழிகாட்டுதல் பட்டியலில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி இடம்பெற்றுள்ள நிலையிலும், பிரி்ட்டனுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இதன் காரணமாக, இந்திய பயணிகளிடையே குழப்பம் நிலவிவருகிறது.
இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்தியாவிற்கு வரும் பிரிட்டன் மக்கள் 10 நாள்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தியா கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் சர்வதேச பயண விதிகள் பட்டியலில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த தடுப்பூசி இடம்பெறாததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதல் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்குவரவுள்ளன.
கரோனா தீவிரத்தின் அடிப்படையில் நாடுகள் பட்டியலிப்பட்டு பிரிட்டனுக்கு பிற நாட்டு மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது அமலில் உள்ள சிவப்பு, அம்பர், பச்சை நிறம் பட்டியல் முறை திரும்பபெறப்படவுள்ளது. இதற்கு பதில் சிவப்பு நிற பட்டியல் முறை மட்டும் அமல்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்கள், பிரிட்டனுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்பதில் குழப்பம் நீடித்துவருகிறது.