விவசாயிகள் நடத்தப்படும் விதமே மத்திய அரசின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுவதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன் லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் மற்றும் பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் எஸ்.ரந்தாவா ஆகியோர் லக்கிம்பூர் வருகை தருவதற்காக புறப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்க வேண்டாம் என்று லக்னோ விமானநிலையத்துக்கு உ.பி. அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இதுகுறித்து கூறியதாவது:
மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நின்றதால் அவர்கள் நசுக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக யார் நின்றாலும் நசுக்கப்படுவார்கள்.
தற்போது விவசாயிகள் நடத்தப்படும் விதமே மத்திய அரசின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், இந்த மனநிலை நாட்டிற்கு நல்லதல்ல.
யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் சிறந்த சட்டம்-ஒழுங்கு கடைபிடிக்கப்படும் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்தார். ஆனால், இப்போது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை நாடே பார்க்கிறது.
மத்திய இணையமைச்சரின் மகன் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார். குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்றால் லக்கிம்பூர் வருவதற்கு எங்களுக்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | உ.பி.: விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 போ் பலி