உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர்.
கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள், சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து உள்ளனர்.
ஹாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட எட்டு பேரை இன்று வரை காவலில் எடுக்க மும்பை நீதிமன்றம் போதை தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கியிருந்தது. பாஜக நிர்வாகி ஒருவரும் தனியார் துப்பறிவாளர் ஒருவரும் போதை தடுப்பு பிரிவு ரகசியமாக சோதனை நடத்தவிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றும் அவர்களும் அந்த சோதனையில் கலந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
உல்லாச கப்பலில் போதை தடுப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்ட அதே நாளில், பாஜக நிர்வாகி கேபி கோசவி, தனியார் துப்பறிவாளர் மனிஷ் பானுஷாலி ஆகியோர் மும்மையில் உள்ள போதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வெள்ளை நிற காரில் சென்று இறங்குவது போன்ற விடியோவை மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பின்னர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "உல்லாச கப்பலில் போதை தடுப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்ட அதே இரவன்று, பாஜக நிர்வாகி கேபி கோசவி, தனியார் துப்பறிவாளர் மனிஷ் பானுஷாலி ஆகியோர் மும்மையில் உள்ள போதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வெள்ளை நிற காரில் சென்றுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதை தடுப்பு பிரிவு அலுலவர் சமீர் வாங்கடேவின் அறிக்கையில் சந்தேகம் எழுப்பிய நவாப் மாலிக், "இந்த விவகாரம் தொடர்பாக எட்டு முதல் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சமீர் வாங்கடே தெரிவித்துள்ளார். ஆனால், எட்டு பேர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் ஏன் இதில் உறுதியாக இல்லை. இன்னும் இருவரை கைது செய்ய அவர்கள் திட்டமிட்டுருந்தனரா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.