நாட்டில் 29 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் கொண்டாடி வருகிறது என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியைக் கடந்தது.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 9,361 பேருக்கு கரோனா தொற்று
100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இனிப்பு வழங்கி கொண்டாடியது. 100 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது தொடா்பான பாடலையும் திரைப்படத்தையும் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இந்நிலையில் நாட்டில் 29 கோடி மக்களுக்கு மட்டுமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தியதாக கொண்டாடி வருவது எதனால் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நாட்டில் இன்னும் 62 கோடி பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசி கூட செலுத்தப்படாத நிலையில் இந்தியாவின் பாதிப்பான நிலையை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி கொண்டாட்டங்களை நிறுத்திவிட்டு அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என சித்தராமையா தெரிவித்துள்ளார்.