ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே வியாழக்கிழமை மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தாத்ரியிலிருந்து தோடா நோக்கிச் சென்ற மினி பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 8 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தோடா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே, விபத்து தொடர்பாக தோடா துணை ஆணையர் விகாஸ் சர்மாவிடம் பேசியதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் தோடா அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.