

துரோகம் இழைத்தவர்களுடன் இனிமேல் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டோம் என மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பாட்டீல் மேலும் தெரிவித்தது:
"மாநிலத்தில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எனவே, மோடியின் பெயரிலும் அவரது நிர்வாகத் திறன் பெயரிலும் மக்களிடம் வாக்கு சேகரித்து பின்னர் கட்சி மாறியவர்களிடம் கூட்டணி வைக்க வேண்டிய தேவையில்லை.
பேரவையில் 56 இடங்களில் வென்றதன் மூலம் முதல்வர் பதவியைப் பெற்றவர்களுடனோ, 54 இடங்களில் வென்றதன் மூலம் துணை முதல்வர் பதவியைப் பெற்றவர்களுடனோ அல்லது 44 இடங்களில் வென்றதன் மூலம் வருவாய்த் துறை அமைச்சர் பதவியைப் பெற்றவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,130 பேருக்கு கரோனா தொற்று
எப்போது தேர்தல் வந்தாலும், எங்களுடன் எப்போதும் உறுதுணையாக நிற்கும் ராம்தாஸ் அதாவாலே, மகாதேவ் ஜன்கர், விநாயக் மேத்தே, வினய் கோரே போன்றவர்களுடனே கூட்டணி வைப்போம்."
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனை தேர்தலுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. தேர்தலில் சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.