பஞ்சாப் மாநிலத் தலைவர் சித்துவிற்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அமரீந்தர் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதிலிருந்து முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் சித்துவிற்கும் மோதல் போக்கு நிலவி வந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கரோனா
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தகுதியான நபர் என யாரை நினைக்கிறதோ அவரை நியமிக்கட்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து பேட்டியளித்துள்ள அவர், “நவ்ஜோத் சிங் சித்து ஒரு திறமையற்ற மனிதர். அவர் ஒரு பேரழிவாக இருக்கப்போகிறார். அடுத்த முதல்வராக அவர் முன்மொழியப்பட்டால் அதனை நான் எதிர்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கா.செல்லப்பனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது
தொடர்ந்து பேசிய அவர், “அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். அவர் (பாகிஸ்தான் இராணுவத் தலைவர்) கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக இருக்கிறார். அவர் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் எதிர்ப்பேன்” என போர்க்கொடி தூக்கியுள்ளார்.