குருகிராம்: கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தாமலிருக்கும் 54 ஆயிரம் பேரை குருகிராம் சுகாதாரத் துறை தேடிக் கொண்டிருக்கிறது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இவர்களின் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் அவர்களது விவரங்கள் அளிக்கப்பட்டு, தனிப்பட்ட முறையில் இவர்களை தொடர்பு கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குருகிராம் சுகாதாரத் துறை முதன்மை அலுவலர் டாக்டர் விரேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த 54 ஆயிரம் பேரும், முதல் தவணை கோவிஷீல்டு செலுத்திக் கொண்டு, இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக் கெடு நிறைவடைந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தவறியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஹரியாணா அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.