மும்பையில் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணுக்கு மரபணு பரிசோதனை செய்ததில், அவருக்கு ஒமைக்ரானிலிருந்து உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி புதன்கிழமை தெரிவித்திருந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாக பிஐபி மகாராஷ்டிரம் வெளியிட்ட செய்தியில்,
“பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவரின் மருத்துவக் கோப்புகள் அனைத்தையும் மரபணு நிபுணர்கள் சோதனை செய்தனர். தற்போதைய சான்றுகளின்படி, எக்ஸ்இ வகை கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாராமும் இல்லை.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 50 வயதுடைய பெண், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் கரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளுக்கு அவர் பயணம் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் வகையான பிஏ.2 தீநுண்மியைவிட எக்ஸ்இ வகை தீநுண்மி 10 சதவீதம் வேகமாகப் பரவக் கூடியதாக தென்படுகிறது. இந்த புதிய வகை தீநுண்மி முந்தைய கரோனா வகைகளைவிட வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.