புது தில்லி: நாட்டில் முதல் முறையாக நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று நிறைவு பெற்றது. சுமார் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. உறுதியான தொகை விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிவேக இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஏழாவது நாளாக திங்கள்கிழமை காலை தொடங்கி பிற்பகலில் நிறைவு பெற்றது. இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
7 நாள்களாக நடைபெற்ற ஏலம் முடிந்த நிலையில் ஜியோ நிறுவனம் அதிகளவில் ஏலம் எடுத்ததாகவும், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் ஏலம் எடுத்திருப்பதாகவும், அதானி குழுமம் குறைந்த அளவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஏலம் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் கூறுகையில், 5ஜி சேவையை கிராமப்புறங்களுக்கும் எடுத்துச்செல்ல நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன’ என்றாா்.
அதிவேக இணைய சேவை, மிக விரைவான பதிவிறக்கம் உள்ளிட்ட சேவைகளை அளிக்கும் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி எண்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.