கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளத்தின் 8 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை, மணிமாலா மற்றும் அச்சன்கோவில் போன்ற பல்வேறு ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டுகிறது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக, பல குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல அணைகளில் நீர் அபாய அளவை எட்டியுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 4 முதல் 8-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களில் 18 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான நிலங்கள் சேதமடைந்தன மற்றும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.