ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பிகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் நள்ளிரவில் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு பந்திபோராவின் சோத்னாரா சும்பலில் பயங்கரவாதிகள் பிகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அதில் காயமடைந்த புலம்பெயர் தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்ததாகவும் காஷ்மீர் மண்டல காவல்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அப்னி கட்சியின் தலைவரும், பந்திபோரா முன்னாள் எம்எல்ஏவுமான உஸ்மான் மஜித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பந்திபோரா மாவட்டத்தின் சௌத்னாரா பகுதியில் உள்ளூர் அல்லாத தொழிலாளி முகமது அம்ரேஸ் கொல்லப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவிகளைக் கொல்வது எந்த வகையிலும் துணிச்சலானது அல்ல, கோழைத்தனமான தாக்குதல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட நான்காவது புலம்பெயர் தொழிலாளி இவராவார்.