முறைகேடாக பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்துள்ள பிகார் பாஜக தலைவர்களின் சொத்துக்கள் மீது புல்டோசரை பயன்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதுல் அஞ்சன் தெரிவித்துள்ளார்.
பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்துள்ளார். பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு நிதீஷ் குமார் அமைத்துள்ள இந்த கூட்டணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ‘3 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை’
இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டம் செய்தவர்களின் வீடுகளை அம்மாநில அரசுகள் புல்டோசர்களைக் கொண்டு இடித்ததைப் போன்று பிகாரில் பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்த பாஜக தலைவர்களின் இல்லங்களை நிதீஷ் குமார் அரசு இடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் அஞ்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர், “முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முறைகேடான வகையில் பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்து கட்டடங்களைக் கட்டியுள்ள பாஜக தலைவர்களின் பட்டியலை தயாரிக்க தங்களது அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அவர்களின் சொத்துக்களின் மீது புல்டோசர்களைப் பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு தள்ளுபடி
மேலும் எதிர்க்கட்சிகள் ஊழல் மிக்கவை என்று கூறும் பாஜக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அஞ்சன் வலியுறுத்தியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது குறித்து வெளியாகும் செய்திக்கு பதிலளித்த அஞ்சன் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அதற்கு பெயர் சூட்ட முயற்சிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.