தெலங்கானாவில் பள்ளிக்கு அனுப்ப மறுத்த மாணவனின் இல்லத்தில் தர்னா போராட்டம் நடத்தி, கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு எடுத்துரைத்து மாணவனை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் மகனை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, வீட்டு வாசலில் தர்னா போராட்டம் நடத்தி ஆசிரியர் ஒருவர், மாணவனை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்திலுள்ள பெஜாங்கி கிராமத்தில்லுள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரவீன் குமார்.
மொத்தம் 64 மாணவர்கள் பெஜாங்கி பகுதியிலுள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர். இதில் 4 பேர் 10ஆம் வகுப்பில் பயின்று வருகின்றனர். இதனிடையே நவீன் என்ற 10ஆம் வகுப்பு மாணவன் கடந்த பத்து நாள்களாக பள்ளிக்கு வரவில்லை. இதனை உணர்ந்த ஆசிரியர், மாணவனின் இல்லத்தைத் தேடிச் சென்று செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெஜாங்கி கிராமத்திலுள்ள மாணவன் நவீனின் இல்லத்திற்குச் சென்ற ஆசிரியர் பிரவீன், மாணவனின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியரிடம் மாணவனின் பெற்றோர்கள் ஆசிரியரிடம் பேச வந்தனர். அப்போது கல்வியின் முக்கியத்துவம் குறித்து பெற்றோரிடம் ஆசிரியர் எடுத்துரைத்தார்.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் 10ஆம் வகுப்பு மிகவும் முக்கியமானது என்றும், அடுத்து எதிர்காலத்தில் எந்தப் பணிக்குச் சென்றாலும் 10ஆம் வகுப்பு சான்றிதழ் கேட்கப்படும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
இதனால் மனம் திருந்திய பெற்றோர், மாணவனை ஆசிரியருடன் அனுப்பி வைத்தனர். பள்ளிக்கு வராத ஒரு மாணவனுக்காக ஆசிரியர் வீடு தேடி வந்து தர்னா நடத்தி அழைத்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.