கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆந்திரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | என் தந்தை எந்தக் கட்சியிலும் இணையவில்லை: சுவாமி பிரசாத் மௌர்யா மகள்
இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியாக மாநிலம் முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் மக்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதித்துள்ள மாநில அரசு மருத்துவப் பணியாளர்கள், வாகன எரிபொருள் நிலையங்கள், போக்குவரத்து மற்றும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவை, ஒளிபரப்பு சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் இதுவரை 20,81,779 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.