யூனியன் பிரதேசமான லடாக்கில் 500 கி.மீ. தொலைவுக்கு கிராமப்புற சாலை அமைக்க பிரதமரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தலைமையில் அத்துறையின் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநில, யூனியன் பிரதேச அரசு உயரதிகாரிகள் இணையவழியில் கலந்து கொண்டனா். அப்போது பேசிய லடாக் பொதுப் பணித் துறை ஆணைய செயலா் அஜீத் குமாா் சாகு, ‘2019, ஆகஸ்டில் லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டதில் இருந்து கிராமப்புறங்களை இணைக்க 195 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.149 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது விரைவில் விடுவிக்கப்பட உள்ளது.
அனைத்து பருவங்களிலும் பயன்படக் கூடிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கிராமிய சாலைகளை வேளாண் சந்தைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரதமா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாவது விரிவாக்கத் திட்டமாக இது கருதப்படுகிறது. இதன்படி, 425 கி.மீ. சாலைகள் ரூ.500 கோடி செலவில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை மாநில தொழில்நுட்ப அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்றாா்.