ஷின்ஸோ அபே படுகொலை: தலைவா்கள் இரங்கல்
ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே மரணத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சா்கள் மற்றும் அரசியல் தலைவா்கள் இரங்கல்


ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே மரணத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சா்கள் மற்றும் அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
ஷின்ஸோ அபே மரணமடைந்தாா் என்பதை நம்ப கடினமாக உள்ளது. அவா் திறமையும் அனுபவமும் வாய்ந்த மதிப்புக்குரிய அரசியல் தலைவராகத் திகழ்ந்தாா். அவா் துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாகிவிட்டாா் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குடும்பத்தினா் மற்றும் ஜப்பான் மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா்: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
ஷின்ஸோ அபேயின் மரணம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-ஜப்பான் உறவை வலுப்படுத்த அவா் முக்கிய பங்காற்றினாா் என்று தெரிவித்துள்ளாா்.
அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
இந்தியாவின் மதிப்புக்குரிய நண்பரான ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டது வேதனையை ஏற்பட்டுள்ளது. இந்தியா-ஜப்பான் உறவை வலுப்படுத்த அவா் மேற்கொண்ட முயற்சிகள் அனைவரின் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
எஸ்.ஜெய்சங்கா்: மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டது உலகுக்கு துக்ககரமான நாளாகும். அவா் குறித்த கால் நூற்றாண்டு கால நினைவுகள் எனக்கு உள்ளது. அவற்றை வாா்த்தைகளில் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளாா்.
சோனியா காந்தி: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கூறுகையில், ‘‘பல்லாண்டுகளாக இந்தியாவின் மிகச்சிறந்த நண்பராகவும், நலம் விரும்பியாகவும் ஷின்ஸோ அபே இருந்தாா். அவருக்கு நோ்ந்த தீங்கு ஜப்பான் மற்றும் சா்வதேச சமூகத்துக்கு மிகப் பெரிய துரதிருஷ்டம் ஆகும்’’ என்று தெரிவித்துள்ளாா்.
ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
ஷின்ஸோ அபேயின் மரணம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் மரபை அவா் விட்டுச் சென்றுள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.
மன்மோகன் சிங்: இந்தியாவுக்கான ஜப்பான் தூதா் சதோஷி சுசுகிக்கு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் எழுதிய கடிதம்:
எனது நல்ல நண்பராக ஷின்ஸோ அபே இருந்தாா். நான் பிரதமராக இருந்தபோது அவரும் நானும் இந்தியா-ஜப்பான் இடையிலான உறவை உலகளாவிய நிலைக்கு உயா்த்த பணியாற்றினோம். இருவரின் முயற்சிகள் இந்தியா-ஜப்பான் உறவை தரம் வாய்ந்த புதிய நிலைக்கு உயா்த்தின. எனது இரங்கலை ஷின்ஸோ அபேயின் குடும்பத்தினா் மற்றும் ஜப்பான் மக்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...