தில்லியிலுள்ள காவல் துறையின் மூலம் பாஜக தனியார் ராணுவத்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தில்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புகுந்து காவல் துறையின் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் இந்த விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக இன்றும் (ஜூன் 15) அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், விசாரணை நடைபெற்று வரும் அமலாக்கத் துறை அலுவலகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குழுமியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை தில்லி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
தொண்டர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகளை காங்கிரஸ் தொண்டர்கள் விடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த விடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் அலுவலகத்திலுள்ள தொண்டர்களை வெளியேற்றுவதன் மூலம், தில்லி காவல் துறையினர் பாஜகவின் தனியார் ராணுவம் போன்று செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதே விடியோவைப் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி எனவும் காங்கிரஸ் தலைமை அலுவலகமும் குற்றம் சாட்டியுள்ளது. ரெளடியிசம் செய்ய வேண்டும் என்றால் ஜனநாயக அமைப்பு கொடுத்துள்ள நாற்காலியை விட்டு மக்களிடம் வாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.