இளைஞர்களுக்கு பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது: ராகுல்காந்தி
புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டு ஆட்சியில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பக்கோடா தயாரிக்க மட்டுமே அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் தற்காலிக பணி அடிப்படையில் ஆள் சோ்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞா்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றுவா். இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசம், பிகாா், தெலங்கானா, ஹரியாணா, ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் தொடா்ச்சியாக தமிழகத்திலும் அக்னிபத் திட்டத்துக்கு இளைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனா்.
இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரல் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி ட்விட்டர் பக்க பதிவில், வேலைகள் தொடர்பாக தவறான நம்பிக்கையைத் திரும்பத் திரும்ப பிரதமர் நரேந்திர மோடி அளித்துவிட்டு, இப்போது, இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்டம் எனும் 'அக்னிபாதையில்' நடக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், நாட்டின் இத்தகைய நிலைக்கு பிரதமர் மோடி மட்டுமே காரணம் எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.