
பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க கோரியுள்ளார்.
நடந்துமுடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வருகிற மார்ச் 16 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். பஞ்சாபில் புதிய அரசின் பதவியேற்பு விழா, ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என பகவந்த் மான் கூறியுள்ளார்.
நேற்று அவர், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை தில்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் பகவந்த் மான் இன்று, சண்டீகரில் உள்ள ராஜ்பவனில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பஞ்சாபில் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், 'புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் வருவார்கள். அவர்களும் பகத்சிங்குக்கு அஞ்சலி செலுத்துவார்கள். நல்ல அமைச்சரவை அமையும், இதுவரை எடுக்காத வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை புதிய அரசு எடுக்கும். எனவே, நீங்கள் காத்திருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.