பாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தேவேந்திர யாதவ், ரமேஷ் மஹ்தோ, ஜே.கே. யாதவ் 3 பேரும் ஒரே இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி வெள்ளிக்கிழமை மாலை உட்கொண்டனர். இரவில் அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர்கள் குடும்பத்தினர் கோபால்கஞ்சில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை இறந்தனர்.
ரிங்கு யாதவ் மற்றும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 9 அன்று கள்ளச்சாராயம் அருந்தியதால், சிவானில் 3 பேரும், மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் 2 பேரும் இறந்தனர்.