மாநிலங்களவைப் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் இன்று (வியாழக்கிழமை) தில்லியில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. சோமபிரசாத் மற்றும் இடது முன்னணியின் கூட்டணியில் உள்ள லோக்காந்திரிக் ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.வி. ஷ்ரேயம்ஸ் குமார் ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது.
140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு முழுப் பெரும்பான்மை இருப்பதால், இடது ஜனநாயக முன்னணி இரண்டு இடங்களில் வெல்வது முன்கூட்டியே உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் ஒரு இடத்தில் வெல்லும்.
இதையும் படிக்க | இளையராஜா இசை நிகழ்ச்சி: சென்னை தீவுத்திடலில் போக்குவரத்து மாற்றம்
இதில், மாநிலங்களவைப் பதவியைத் தொடர தனக்கு விருப்பமில்லை என ஏ.கே. அந்தோனி முன்னாள் முதல்வர் உமன் சாண்டி, மாநிலத் தலைவர் சுதாகரன் மற்றும் பிற மூத்த தலைவர்களிடம் தெரிவித்துவிட்டார்.
மாநிலங்களவைப் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்வதில் கேரள காங்கிரஸில் சிக்கல் எழுந்தது. எம். லிஜுவை அறிவிக்க வேண்டும் என கேரளத்திலுள்ள காங்கிரஸ் தெரிவிக்கிறது. தேசிய தலைவர்கள் கிருஷ்ணன் ஸ்ரீனிவாசனை அறிவிக்க விரும்புகின்றனர்.
இதனால், வேட்பாளரை இறுதி செய்வது குறித்து தில்லியிலுள்ள கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சுதாகரன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு சுதாகரன் கூறியதாவது:
"மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளரைப் பரிந்துரைப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்தேன். இருவரும் இளைஞர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்."