சோலார் பேனல் ஊழல் வழக்கு: கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் சோதனை
சோலார் பேனல் ஊழல் வழக்கிற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் வசிக்கும் அரசு இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
கேரளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.
கைதானதைத் தொடர்ந்து சரிதா அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி அவரின் 2 அமைச்சர்கள், 2 முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பாலியல் அத்துமீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் அரசு கடந்த ஜனவரியில் பரி்ந்துரை செய்தது.
பின் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி.க்கள், கே.சி.வேணுகோபால், ஹைபி ஈடன், அடூர் பிரகாஷ், காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த அப்துல்லா குட்டி ஆகிய 5 பேர்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்குத் தொடர்பாக பினராயி விஜயன் வசித்து வரும் அரசு இல்லத்தில்தான் முன்னாள் முதல்வர் உம்மான் சாண்டியும் வசித்ததால் அங்கு நேற்று காலை சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் வழக்கிற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது .