முன்ட்கா பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நான்கு மாடிக் கட்டடத்தில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஒற்றை வழி பாதை மட்டுமே இருந்ததால் விபத்தில் சிக்கிய பலரும் தப்பிப்பதை கடினமாக்கியதாகவும், இது மனித உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கலாம் எனவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேற்கு தில்லி முன்ட்கா பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 27 போ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
பலா் மாயமாகியுள்ளனா். காயமடைந்த பலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், கட்டடத்தில் இருந்த ஒற்றை நுழைவு மற்றும் வெளியேறும் பாதையால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கான ஏற்படக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்பு துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது:
தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்திற்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெறப்படவில்லை.
சிசிடிவி கேமரா மற்றும் ரெளட்டா் தயாரிப்பு மற்றும் உதிரிபாகம் இணைப்பு நிறுவனத்தின் அலுவலகம் உள்ள கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தற்போது மீட்புப் பணி முடிந்துவிட்டது. கட்டடடத்தில் இருந்து வெளியேறுவதற்கும், நுழைவதற்கும் ஒற்றை பாதை இருந்ததுதான் இவ்வளவு பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகும்.
சனிக்கிழமை காலை மேலும் சில எரிந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. இறப்பு எண்ணிக்கை 30 வரை உயரக்கூடும். சடலம் எரிந்த நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.
கட்டடத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு குறுகிய படிக்கட்டு மட்டுமே இருந்தது. இது தீ விபத்தில் சிக்கியவா்கள் தப்பிப்பதை கடினமாக்கிவிட்டது என்றாா் அவா்.