நான் பாஜகவில் சேரவில்லை என்றும் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹார்திக் படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹார்திக் படேல் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் இன்று தைரியமாக ராஜிநாமா செய்திருக்கிறேன். என்னுடைய முடிவை காங்கிரஸ் கட்சியினரும், குஜராத் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது என்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ட்விட்டர் குறிப்பிலிருந்து காங்கிரஸை நீக்கிய ஹார்திக்!
முன்னதாக இம்மாத தொடக்கத்திலேயே ட்விட்டர் பக்கத்தில் 'குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர்' பதவியையும் 'கை' சின்னத்தையும் நீக்கியிருந்தார்.
இதனிடையே, அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இதற்கு பதில் அளித்துள்ள ஹார்திக் படேல், 'நான் பாஜகவில் இன்னும் சேரவில்லை. பாஜகவில் சேர்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹார்திக் படேல் ராஜிநாமா செய்துள்ளது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் ஹார்திக் படேல் ராஜிநாமா