பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைப்பதே விலை குறைப்பாகும்: ப.சிதம்பரம்

கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது, அதிகமாகக் கொள்ளையடித்து, பின்னர் குறைவாகக் கொடுப்பதற்குச் சமம்
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Published on
Updated on
2 min read


புதுதில்லி: கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது, அதிகமாகக் கொள்ளையடித்து, பின்னர் குறைவாகக் கொடுப்பதற்குச் சமம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயா்வால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், விலைக் குறைப்பு தொடா்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தனது ட்விட்டா் பதிவுகளில் வெளியிட்டாா். 

அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இதன் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் பயன்பெறும் 9 கோடி பேருக்கு இந்த ஆண்டில் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் (12 சிலிண்டா்களுக்கு) வழங்கப்படும். 

மேலும், மத்திய அரசைப் பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக, கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது, உள்ளூா் வரியைக் குறைக்காத மாநிலங்களும் தற்போது வரியைக் குறைக்க வேண்டும் என  நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினார். 

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: 

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைப்பது முழுச் சுமையும் மத்திய அரசுக்கு மட்டுமே. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  ‘கலால் வரி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், ஆனால் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாமல் ‘கூடுதல் கலால் வரி’யில் இந்த குறைப்பு உள்ளது.

"எனவே, நேற்று நான் கூறியதற்கு மாறாக, குறைப்பின் முழுச் சுமையும் மத்திய அரசின் மீதுதான் விழுகிறது. அந்த அளவிற்கு, நான் தெளிவாக நிற்கிறேன்," என்றவர், 

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளின் மூலம் மாநிலங்கள் மிகக் குறைவாகவே பெறுகின்றன. மத்திய கலால் வரியை 1 ரூபாய் குறைக்கும் போது, ​​அந்த ரூபாயில் 41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது. அதாவது, மத்திய அரசுக்கு 59 பைசாவும், மாநில அரசுகளுக்கு 41 பைசாவும் குறைத்துள்ளது. எனவே, உள்ளூா் வரியைக் குறைக்காத மாநிலங்களும் தற்போது வரியைக் குறைக்க வேண்டும் என நிதியமைச்சர் அழைப்பு விடுத்தது வீண். 

"அவர்களின் வருமானம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியிலிருந்தே கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு குறைக்கும் போதுதான் உண்மையான விலக்கு கிடைக்கும்.

மத்திய அரசு அதிக நிதியை வழங்கினாலோ அல்லது அவர்களுக்கு அதிக மானியங்களை வழங்கினாலோ அவர்களால் அந்த வருவாயை விட்டுக்கொடுக்க முடியுமா என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும்,  நிலைமை "பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும்" இடையே இருப்பது உள்ளது," என்று கூறியுள்ளார். 

மேலும், கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது, அதிகமாகக் கொள்ளையடித்து, பின்னர் குறைவாகக் கொடுப்பதற்குச் சமம்! என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com