பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினுக்கு விஐபி வசதிகள் செய்துகொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து திகார் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணமோசடி வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அவரின் மனைவி உள்ளிட்டோரை பணமோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயின் பின்னர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் விடியோவை பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா சுட்டுரையில் இன்று (நவ.19) பகிர்ந்துள்ளார்.
அதில், சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயின் அறையில் கேன் குடிநீர், மெத்தை, தலை மசாஜ், உடல் மசாஜ் போன்ற விஐபி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் இருந்தபோது, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறைக்குள் இருந்தபடியே மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.