மும்பை: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், புறநகர் பகுதியான விக்ரோலியில் உள்ள கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தைத் தவிர்த்து, மற்ற நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துவிட்டதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
விக்ரோலியில் உள்ள கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு முதலே மாநில அரசுக்கும் நிறுவனத்துக்கும் இடையே சட்டப்பூர்வ மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்கி மகாராஷ்டிர அரசு செப்டம்பர் 15ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தது. இதற்கு நீதிபதிகள் ஆர்.டி. தனுகா மற்றும் எஸ்.ஜி.டிகே ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 5-ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவித்தது.
மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அசுதோஷ் கும்பகோனி, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் அவசரமானது என்றார். திட்டத்திற்கு தேவையான முழு நிலமும் மும்பையிலிருந்து அகமதாபாத் வரை கையகப்படுத்திய நிலையில், கோத்ரெஜுக்கு சொந்தமான நிலத்தை தவிர்த்து மற்ற நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது என்றார் கும்பகோனி.
முன்னதாக மாநில அரசும், தேசிய அதிவேக ரயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் நிலம் கையகப்படுத்தும் பணியில் கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் தேவையற்ற தடைகளை உருவாக்குவதால் திட்டம் தாமதப்படுவதாக கூறியிருந்தது.
இந்த கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் மறுத்ததுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது.