திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் புதிய அணி அமையவுள்ளது குறித்து...

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
படம்: யூடியூப்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
படம்: யூடியூப்
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி. வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இதனிடையே, திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களுக்கான அரசியல் வாய்ப்புகள், அங்கீகாரம் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.
இதுவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்போது பல கட்சிகள் தங்களது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோன்று புரட்சி பாரதம் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றன.
மேலும் பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகளும் தங்களது முடிவுகளை எடுக்கத் தயாராக உள்ளன.
பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக போன்றவற்றால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை பல சிறு கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களிடையே நிலவுகிறது.
இதனால், சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக்காக புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களும் இந்த அரசியல் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளன.
வரவிருக்கும் தேர்தலில் சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காப்பு, மீனவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களின் உரிமைகள் ஆகியவற்றை முன்வைத்து அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாளை பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாகவும், அந்த முடிவுக்கு தமிழக மக்களின் பேராதரவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...