மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் டி நிறுவனத்துடன் தொடர்புடைய 5 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பணமோசடி மற்றும் தப்பி ஓடிய வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான சோட்டா ஷகீலுடன் தொடர்பிலிருந்த இரண்டு பேரை சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் அஜய் கந்தா, பெரோஸ் சம்தா, சமீர் கான், பாப்பா பதான் மற்றும் அம்ஜத் ரெட்கர் ஆகிய ஐந்து பேரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவூத் இப்ராஹிமின் டி கம்பெனி ஆரம்பித்ததில் தங்கக் கடத்தல், கள்ள நோட்டு அச்சிடுதல் போன்ற குற்றங்கள் புரிந்துவந்தது. 1993ல் மும்பையில் ஒரே நேரத்தில் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்கு தாவூத் இப்ராஹிம் உதவி செய்தார். இந்த குண்டு வெடிப்பில் 250 பேர் உயிரிழந்தனர்.
தாவூத் இப்ராஹிம் தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. அதன்பிறகு, சமீபத்தில் மீண்டும் தாவூத் இப்ராஹிம் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 லட்சமும், அவரது கூட்டாளி சோட்டா ஷகீல் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ள நிலையில், மீண்டும் தேடுதலை வேகப்படுத்தியுள்ள நிலையில், இன்று இப்ராஹிமின் டி நிறுவனத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.