ஒற்றுமைக்கான நடைபயணத்தில் 900 கிலோ மீட்டரை கடந்து கர்நாடகத்தில் நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் செப்.7-ல் தொடங்கிய நடைபயணம், கேரளத்தை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகின்றது.
தற்போது கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வரும் சூழலிலும், மழையில் நனைந்தபடி நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை 6.30 மணிக்கு சித்ரதுர்கா மாவட்டம் சால்கெரே பகுதியில் நடைபயணத்தை தொடர்ந்த ராகுல், இரவு 7 மணிக்கு ஹிரேஹள்ளி என்ற பகுதியில் ஓய்வெடுக்கவுள்ளார்.
மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்களில் 3,570 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.