
குஜராத்தின் மோா்பி தொங்கு பால விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்குத் தலைவா்கள் பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தொங்கு பால விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு அவா் கடிதம் எழுதியுள்ளதாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
விபத்து ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தோா் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புவதாகவும் பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அரசுக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருடைய துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
திபெத்திய பௌத்த மதத் தலைவா் தலாய் லாமா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற விபத்துகள் எதிா்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுமெனவும் நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பூடான் பிரதமா் லோதே ஷெரிங், காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா். சவூதி அரேபியா, சீனா, போலந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களும் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.