லகிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் இரண்டு தலித் சகோதரிகள் பலியான சம்பவத்தில், இருவரும் பலாத்காரத்துக்கு உள்ளாகி, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உடல் கூறாய்வு முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நிகாசன் பகுதியில் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. மருத்துவமனை தூய்மை பணியாளரை கரம் பிடித்த பெண் மருத்துவர்
உடல் கூறாய்வு முடிந்து, 14 மற்றும் 17 வயதாகும் இரண்டு சிறுமிகளின் உடல்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இரு சிறுமிகளின் இறுதிச் சடங்குகள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரிகள் இருவரின் உடல்களும், அவர்களது வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கரும்புத் தோட்டத்திலிருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
லகிம்பூர் கேரி காவல்துறை கண்காணிப்பாளர் இது குறித்துப் பேசுகையில், நள்ளிரவு முழுக்க நடந்த தேடுதல் வேட்டையில் குற்றத்தில தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இரண்டு சகோதரிகளுடனும் ஜுனைத், சோஹாலி இருவரும் பழகி வந்துள்ளனர். இவர்களை சந்திக்க சகோதரிகள் வீட்டை விட்டுக் கிளம்பியிருக்கிறார்கள். பிறகு அவர்களை காணவில்லை. சடலமாகத்தான் கண்டெடுக்கப்பட்டனர்.
இருவரும் கடத்தப்படவில்லை என்றும், இரண்டு பேரும் விரும்பியே இளைஞர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், சகோதரிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை ஜுனைதும் சோஹாலியும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இவர்களை மரத்தில் தொங்க விட உதவி செய்த இளைஞர்கள் மற்றும், இவர்களை சகோதரிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்த பக்கத்து வீட்டு இளைஞர் என ஆறுர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.