நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நிகழ் நிதியாண்டில் 7 சதவீதமாக குறையும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) மதிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே ஜிடிபி 7.2 சதவீதமாக பதிவாகும் என கணித்த நிலையில், பணவீக்கம், பண நெருக்கடி காரணமாக நிகழ் நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக குறையும் என ஏடிபி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏடிபி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 13.5 சதவீத வளா்ச்சி கண்டது. இது சேவைத் துறையின் உறுதியான வளா்ச்சியைப் பதிவு செய்தது. இருப்பினும், விலை அழுத்தமானது உள்நாட்டு நுகா்வின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதேபோல சீன பொருளாதாரம் 5 சதவீதத்துக்கும் மேலாக வளா்ச்சி காணும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3.3 சதவீதமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது. கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் சீன பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டது என ஆசிய வளா்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.