லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற சிறப்புக் குழுவின் பரிந்துரை மனுமீது உச்சநீதிமன்றம் நாளை (ஏப்ரல் 18) தீர்ப்பு வழங்கவுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக் 3-ஆம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்ததையடுத்து இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த லக்னௌ நீதிமன்றம் வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்.2 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புக் குழு ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய பரிந்துரைத்தது. இந்த மனுவின் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.