தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு விவசாயிகளை அனுமதித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸுப்பூர் எல்லையில், காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து போராட்டத்திற்குச் செல்லும் விவசாயிகளை கடும் சோதனைக்குப் பிறகே அனுமதித்தனர்.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி படையெடுத்தனர். பாரதிய கிஷான் யூனியன் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
எனினும் அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் காஸுப்பூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் கடும் சோதனைக்குப் பிறகே போராட்டத்திற்குச் செல்ல அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
விவசாயிகள் போராட்டத்தில் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக, கிழக்கு மாவட்ட காவல் துறை ஆணையர் பிரியங்கா காஷ்யப் தெரிவித்துள்ளார்.