பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது, 5 மாத கா்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடா்பாக 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டது. 14 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் அவா்கள் அனைவரையும் சுதந்திர நாளில் குஜராத் அரசு விடுவித்தது.
கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் மரணம்: மரத்தில் தொங்கிய சடலம்
ஆனால், இவர்களின் விடுதலையைக் குறித்துப் பேசிய பில்கிஸ் பானு, ‘எனது வாழ்க்கையை சீரழித்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று கேள்விப்பட்டபோது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் மீண்டும் எனக்குள் வந்து சேர்ந்தது. அவர்களின் விடுதலை, என் அமைதியை பறித்தது மட்டுமல்லாமல் நீதி மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது’ என வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் 11 பேரின் விடுதலைக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபர்ணா பட் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இதனை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதலும் அளித்துள்ளது.